1000 ரொபாட்டிக் அறுவை சிகிச்சைகள் செய்து எஸ்எஸ்ஐ மந்த்ரா சாதனை

ரொபாட்டிக் அறுவை சிகிச்சைகள் உலகிலிருக்கும் அனைவருக்கும், ஏற்ற கட்டணத்தில் கிடைக்க, அர்ப்பணிப்புடன் இயங்கும் நிறுவனம் எஸ்எஸ் இனொவேஷன்ஸ் ஆகும்.  எஸ்எஸ்ஐ மந்த்ரா என்னும் இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை ரொபாட்டிக் அமைப்பை  இந்நிறுவனம் உருவாக்கி உள்ளது.  எஸ்எஸ்ஐ மந்த்ரா அறுவை சிகிச்சை ரொபாட்டிக் அமைப்பைப் பயன்படுத்தி 1000 ரொபாட்டிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி சாதனையைப் படைத்தது குறித்து அறிக்கையை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது நிறுவனத்தின் வரலாற்றில் மற்றுமொரு மிக முக்கியமான மைல்கல்லாகும்.

முதல் எஸ்எஸ்ஐ மந்த்ரா அறுவை சிகிச்சைக்கான ரொபாட்டிக் அமைப்பு 2022 ஜூலையில் புது தில்லி ராஜீவ் காந்தி புற்றுநோய் மையத்தில் வணிக ரீதியாக முதன் முதலில் நிறுவப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் எஸ்எஸ்ஐ மந்த்ரா நாடு முழுவதும் 30 மருத்துவமனைகளிலும், துபையிலும் நிறுவப்பட்டுள்ளது. மேலும், கற்பிப்பதிலும், பயிற்சி அளிப்பதிலும், உலகப் புகழ் பெற்ற, அமெரிக்க பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலும் நிறுவப்பட்டுள்ளது.  
இது குறித்து எஸ் எஸ் இனோவேஷன்ஸ் நிறுவனர், தலைவர் & சிஇஓ மற்றும் எஸ் எஸ் ஐ மந்த்ரா அமைப்பின் மூளை என்றும் ரொபாட் மருத்துவர் என்றும் அழைக்கப்படும் டாக்டர் சுதீர் ஸ்ரீவாத்சவா கூறுகையில் ‘ஒரு நிறுவனமாக மிக எளிமையான தொடக்கத்திலிருந்து, எங்கள் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியால், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களின் மகத்தான ஆதரவைப் பெற்றுள்ளோம். கூட்டாக இணைந்து, எங்கள் புதுமையான எஸ்எஸ்ஐ மந்த்ரா அமைப்பைப் பயன்படுத்தி இதுவரை 1000 வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் என்னும் மைல்கல்லை எட்டியுள்ளோம். “கோல்டு ஸ்டாண்டர்ட் ஹெல்த்கேர்” என்னும் திட்டம் மூலம், உயர்ரக சிகிச்சைக் கிடைக்க வாய்ப்பில்லாத பல நோயாளிகள், எளிதில் அணுகக்கூடிய வகையில் அனைவருக்கும் ஏற்ற கட்டணத்திலும் வழங்குகிறோம். எங்கள் தொலைநோக்குச் சிந்தனைக்கு உறுதுணையாக இருந்து இந்த சாதனையைச் சாத்தியப்படுத்திய அனைவருக்கும் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 30க்கும் மேற்பட்ட நிறுவல்கள் மற்றும் 1000 வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் என்னும் சாதனையைக் கடலில் மிதக்கும் பனிப்பாறையின் நுனியைத் தொட்டதாகவே கருதுகிறோம். இந்த மைல்கல் மிகவும் முக்கியமானது என்றாலும், இந்தியாவிலும், உலகெங்கிலும், நாங்கள் இன்னும் சாதிக்க வேண்டியது அதிகமுள்ளது என்பதையே இது நமக்கு நினைவூட்டுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலும், உலகெங்கிலும், அதிகம் பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை ரொபாட்டிக் அமைப்பாக எஸ்எஸ்ஐ மந்த்ரா விளங்குவதற்கான ஆற்றல் உண்டென  நிச்சயம் நம்புகிறேன்’ என்றார்.

எஸ்எஸ்ஐ மந்த்ரா அறுவை சிகிச்சை ரொபாட்டிக் சிஸ்டம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அறுவை சிகிச்சை அமைப்பு ஆகும், மேலும், இதய அறுவை சிகிச்சை உட்பட பரந்த அளவிலான அறுவை சிகிச்சைகளைச் செய்யும் திறன் கொண்ட, குறைந்த கட்டணத்திலான, உலகின் ஒரே அமைப்பும் இதுவே ஆகும். எஸ்எஸ்ஐ மந்த்ரா ரொபாட்டிக் சிஸ்டத்திற்கு இந்தியா, இந்தோனேஷியா மற்றும் சமீபத்தில், கௌடமாலாவிலும், ஒழுங்குமுறை அங்கீகாரமும், அனுமதியும், கிடைத்துள்ளது. எஸ்எஸ்ஐ மந்த்ரா அறுவை சிகிச்சை ரொபாட்டிக் சிஸ்டம் 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான அறுவை சிகிச்சை முறைகளில் மருத்துவ ரீதியாகச் சரிபார்க்கப்பட்டுச் சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தில் இதுவரை 1000 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.  2024 - 2025 கால கட்டத்தில் எஸ்எஸ் இன்னோவேஷன்ஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறுமென எதிர்பார்க்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu