வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேசன் சார்பில் பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா சங்கரன்கோயிலில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் ஆளுனர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் ஜோஹோ கார்ப்பரேசன் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு சமூக முன்னெடுப்புகளை எடுத்து வரும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன், தமிழகம் முழுவதும் மக்கள் சேவையாற்றும் வகையில், தற்போது வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேசனாக வளர்ந்து செயல்படத் துவங்கியுள்ளது. வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேசன் பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு இலவச பயிற்சியுடன் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரும் புதிய திட்டத்தைத் தொடங்கியது. இதற்காக சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஷ்ரத்தா மானு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த இலவச வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழா சங்கரன்கோயிலில் இன்று (24/11/2024) நடந்தது. வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேசன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி வரவேற்புரையாற்றினார். அப்போது, வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேசனின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்பாடுகள், இலக்குகள் குறித்து விவரித்தார்.
கோலாகலமாக நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா & புதுச்சேரி முன்னாள் ஆளுனர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு சேர்க்கைக்கான சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். அவர் பேசுகையில், வாய்ஸ் ஆப் தென்காசியாக இருந்தபோது கடந் இரண்டு ஆண்டுகளில் ஏராளமான செயல்பாடுகளைச் செய்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ஸ் ஆப் தென்காசி, வாய்ஸ் ஆப் தமிழ்நாடாக மாறப்போகிறது என்று நினைக்கும்போது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது சேவைகள் மூலம், இனி சாய்ஸ் ஆப் தமிழ்நாடாக இருப்பீர்கள். ஏனென்றால் தென்காசியை உலக வரைபடத்தில் பதியச் செய்தவர்கள் ஶ்ரீதர் வேம்பு மற்றும் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர்தான். தொடர்ந்து இதுபோன்ற பணிகளைச் செய்ய வேண்டும். அதற்கு எப்போதும் நான் உடன் இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரங்கத்தின் உள்ளே வரும்போதே எனக்கு நேர்மறை தாக்கம் ஏற்பட்டது. எங்களாலும் சாதிக்க முடியும் என்ற உள்நோக்க பார்வையோடு, தன்னம்பிக்கையோடு வந்திருக்கும் இல்லத்தரசிகளை வரவேற்கிறேன். அனைவரும் சோம்பேறித்தனம் இல்லாமல் துணிச்சலோடு செயல்பட்டு வெற்றிபெற வாழ்த்துகிறேன், என்றார்.
ஜோஹோ கார்ப்பரேசன் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு சிறப்புரை ஆற்றுகையில், வேலைவாய்ப்புகள் குறித்தும், வேலை எப்படி நம்மைத் தேடி வரும், அதற்கு எப்படி நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும், என்பது குறித்துப் பேசினார். தன்னம்பிக்கை, தன்னார்வம், தன்னொழுக்கத்தோடு அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
விழாவில் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷனின் மாநில நிர்வாகிகள் பதவிப் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் உறுப்பினர்களுக்கு அங்கீகார அட்டையும் வழங்கப்பட்டது. மனிதவள மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் சமுத்ரா செந்தில் உறுதிமொழி வாசிக்க அனைவரும் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேசனின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். ஷ்ரத்தா மானு பவுண்டேசன் நிறுவனர் மதுமிதா நாராயணன், மீனா சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவியா, விஷ்வப்ரியா ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். முடிவில் பவுண்டேசன் தலைமை நிர்வாக அதிகாரி காருண்யா குணவதி நன்றி கூறினார்.
0 கருத்துகள்