வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நடத்திய விண்வெளி அறிவியல் முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

சங்கரன்கோயிலில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நடத்திய விண்வெளி அறிவியல் முகாமை ஆனந்தன் அய்யாசாமி தொடங்கி வைத்து, மாணவர்களிடையே பேசினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட விண்வெளி அறிவியல் முகாம் தொடங்கியது. இதில் 200 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மாணவச்  செல்வங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக செயல்பாடுகளையும், முன்னெடுப்புகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. இந்தியாவிலேயே கல்வியில் தென்காசி மாவட்டம் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வரும் அதன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசமி, மாணவர்கள் பள்ளியில் கற்றுக் கொடுப்பதையும் தாண்டி, அறிவியல் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் 2 நாள் விண்வெளி அறிவியல் முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விண்வெளி அறிவியல் முகாம் தொடங்கியது. நெல்லை தினமலர் நிர்வாக இயக்குனர் விவிஆர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து மாணவர்களை வாழ்த்தினார். வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி முகாமுக்கு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், இத்தனை மாணவர்கள் உற்சாகத்துடன் இந்த முகாமிற்கு வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  நமது மாணவர்களிடத்திலே விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை அதிகரிக்க இந்த முகாம் நிச்சயமாக உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன். விண்வெளி அறிவியல் பற்றி மாணவர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். அறிவியலுக்கும் அன்றாட வாழ்வியலுக்கும் ஏராளமான தொடர்புகள் உண்டு. இங்கு பல அறிவியல் வல்லுனர்கள் வந்துள்ளனர். அவர்கள் உங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். நாங்களும் தொடர்ந்து இதுபோன்ற முகாம்களை நடத்தி உங்களுக்கு பயிற்றுவிக்க தயாராக இருக்கிறோம். கல்வியில் நமது தென்காசி மாவட்டத்தை முதலிடத்திற்குக் கொண்டு வர வேண்டும். அதற்கு இந்த முகாம் முதல் படியாக இருக்க வேண்டும், என்றார்.

முகாமில் மாணவர்களுக்கு விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகள், விண்வெளி மண்டலங்கள், விண்கலங்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியின் முக்கியத்துவம் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது. விண்வெளி தொடர்பான விளையாட்டுகள், செய்முறை விளக்கங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடந்தன. டெலஸ்கோப் மூலம் இரவு நேரத்தில் கோள்களை காணும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

கடையநல்லூர் சாதனா பள்ளி தாளாளரும், தென்காசி அறிவியல் மைய தலைவருமான ரமேஷ், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் முத்துக்குமார் மற்றும் லெனின். டாக்டர் சுப்பையா பாண்டியன், வின்னரசு, டாக்டர் முத்துசாமி உள்ளிட்டோர் மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் குறித்து பேசினர். இந்த முகாம் இன்றும் (01-10-2024) நடக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu